உள்கட்சித் தேர்தலுக்கு தயாராகிறது தி.மு.க-புதிய உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
சென்னை: தி.மு.கவில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி இன்று தொடங்கியது.
95,000 கிளைக் கழகங்களையும், 1 கோடியே 10 லட்சம் உறுப்பினர்களையும் கொண்ட தி.மு.க 14-வது உள்கட்சித் தேர்தலுக்கு தயாராகும் நிலையில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் - புதுப்பித்தல் ஆகிய அடிப்படை பணிகளைத் துவக்கியுள்ளது. இப்பணி ஏப்ரல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பிப்ரவரி 3-ந் தேதி பொதுக்குழுவில் திருத்தம் கொண்டுவரப்பட்ட விதிகளின்படி புது உறுப்பினர் சேர்ப்புப் பணி நடைபெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கைப் படிவத்திற்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25 ஆகும்.
உறுப்பினருக்கான கட்டணத் தொகையை மணியார்டர், டிமாண்ட் டிராப்ட் (டி.டி) மூலம் அனுப்புகின்றவர்கள் அந்தக் கட்டணத் தொகை விவரத்தையும் மணியார்டர் ரசீது அல்லது டிமாண்ட் டிராப்ட் (டி.டி) எண்ணையும் அதற்கென்று படிவத்தில் உள்ள கட்டத்திற்குள் குறித்து அனுப்ப வேண்டும்.
விதி 5, பிரிவு 5-ன்படி உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம் என்று அன்பழகன் தமது அறிக்கையில் நேற்று தெரிவித்திருந்தார்.