மாநில உரிமைகள் தொடர்பான சர்க்காரியா கமிஷன் பரிந்துரை பற்றி விவாதிக்க வேண்டும்: மோடி
காந்திநகர்(குஜராத்): தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவானது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைதான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
மாநில உரிமைகளைப் பறிப்பதற்காகவே திட்டமிட்டுள்ள மேற்கொள்ளப்பட்ட ஒருநடவடிக்கைதான் தேசிய தீவிரவாத தடுப்பு மையம். இதை ஏற்க முடியாது.
மாநிலங்களின் உரிமை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரிய குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக மாநில முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும்.
மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் மாநிலங்களுக்கான உரிமைகள் மீது கொல்லைப் புறம் வழியாக நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல். இது கூட்டாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் பேராபத்தானது.
தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முன்பது தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டியிருக்க வேண்டும் அல்லது மாநிலங்களுடன் ஆலோசித்திருக்க வேண்டும், மாநிலங்களின் உரிமையை முற்று முழுதாக மத்திய அரசு நிராகரித்திருக்கிறது என்றார் அவர்.
தீவிரவாத தடுப்பு மையத்துக்கு ஏற்கெனவே பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் திரிபுரா, உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.