காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்: போலீசார் சமரசம்
குமரி: கருங்கல் காவல் நிலையத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப். அவர் கல்லடையைச் சேர்ந்த கட்சி நிர்வாகி விஜயகுமாரை சந்தித்து உடல் நலம் விசாரிக்கச் சென்றார். அவரை பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது காரின் அருகே நின்ற சிலர் ஜான்ஜேக்கப்பை கிண்டல் செய்து, தாக்க முயன்றனர்.
அப்போது அவருடன் வந்த குமார், ராஜேஷ், ஸ்டீபன், சேகர் ஆகியோர் இதை தட்டிக் கேட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து தங்கம் என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் ஆதரவாளர்கள் குமார், ராஜேஷ், ஸ்டீபன், சேகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து ஜான் ஜேக்கப், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட தங்களது ஆதரவாளர்களுடன் கருங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த டி.எஸ்.பி. சுந்தரராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எம்.எல்.ஏ.வை தாக்க முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.