தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தால் மாநில உரிமை பறிபோகாது-முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம்
மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைத்ததற்கு தமிழ்நாடு உட்பட 7 மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் ஜெய்லலிதா இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகனுக்கு 2 கடிதங்களை எழுதியிருக்கிறார். ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்கத்தின் மமதா பானர்ஜி மற்றும் குஜராத்தின் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் மன்மோகனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதால் மாநிலங்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது,
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மைய்த்தை அமைத்து அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையோ, மாநில அரசுகளின் அதிகாரங்களையோ பாதிக்கச் செய்வது மத்திய அரசின் நோக்கம் அன்று.
புலனாய்வுத் துறை போன்று தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதே தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் நோக்கம். அதனால் தான் அதை தனி அமைப்பாக இல்லாமல் புலனாய்வு அமைப்பான ஐபியின் அங்கமாக அமைக்கப்படுகிறது.
இது குறித்து முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் அதில தெரிவி்ததுள்ளார்.