108 ஆம்புலன்ஸ் திட்டம்: கார்த்தி சிதம்பரம் பார்ட்னராக உள்ள நிறுவனம் மீது ஊழல் புகார்
இதுதொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் கிரிட் சோமையா என்பவரது தலைமையில் ஊழலை வெளிப்படுத்தும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் நடந்து வரும் ஊழல் குறித்து 150 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதை டெல்லியில் வெளியிட்டுப் பேசிய சோமையா கூறுகையில்,
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலோட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் சேர்ந்து காங்கிரஸ் அமைச்சர்களின் மகன்கள் அங்கம் வகிக்கும் நிறுவனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவையை மத்திய அரசும் ராஜஸ்தான் மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்றன. இத்திட்டத்துக்காக ஜிகிட்ஜா ஹெல்த் கேர் நிறுவனம் ஆம்புலன்ஸ்களை இயக்கி வருகிறது. ஆனால், வெளிப்படையற்ற முறையில் பினாமியாகவும் இல்லாத பயணத்துக்கு நோயாளிகளை அழைத்துச் சென்றது போலவும் கணக்குக் காட்டப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா, ஸ்வேதா மங்கள் ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்குப் போட்டியின்றி வெளிப்படையற்ற முறையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் பணியில் இந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட, மாநில அளவிலும், தேசிய கிராமப்புற சுகாதார இயக்க திட்ட இயக்குநர்கள் மூலமும் பல முறை விளக்கம் கோரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதே திட்டத்தில்தான் ஊழல் நடைபெற்றது.
இல்லாத ஆம்புலன்ஸ்கள் செயல்படுவதாக ரசீது பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த செப்டம்பர் மாதம், 50 ஆம்புலன்ஸ்கள் 55,326 முறை சேவை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வு செய்தபோது, 37,458 முறைதான் அவை இயக்கப்பட்டுள்ளன.
இது பற்றித் தகவல் கிடைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது தேசிய கிராமப்புற சுகாதார இயக்க திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலர், மத்திய சுகாதாரச் செயலர் அவசரக் கூட்டம் நடத்தி விசாரணை நடவடிக்கையை நிறுத்திவிட்டனர்.
இந்த ஊழல் விவகாரம் குறித்து உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய நிறுவனத்தின் இயக்குநர்கள், பங்குதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.