வங்கிக் கொள்ளையர்கள் குறித்து துப்பு துலங்கியது-40 தனிப்படைகள் அமைத்து வேட்டை!
சென்னை: சென்னையில் 2 வங்கிகளில் கொள்ளையடித்த துணிகர கும்பல் குறித்த துப்பு ஓரளவு துலங்கி விட்டது. இதையடுத்து 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை வளைத்துப் பிடிக்க சென்னை போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த தகவல் கொடுப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திரிபாதி கூறுகையில்,
சென்னையில் பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை என அடுத்தடுத்து இரண்டு வங்கிகளில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களை அடுத்து அனைத்து வங்கிகளும் காமிரா கண்காணிப்பு பொருத்தப்படும். கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் அனைத்தும், காமிரா வசதி செய்யப்பட்டு அவை உள்ளூர் காவல்நிலையங்களுடன் இணைக்கப்படும். மேலும், அனைத்து வங்கிகளும், காவல்துறை ஆணைய அலுவலகத்துடன் தொடர்பில் இருக்குமாறு ஹாட்லைன் வசதி செய்யப்படும்.
வங்கிக் கொள்ளையர்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 91100, 98408 14110 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு துப்பு அளிக்கலாம். சரியான தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். கொள்ளையர்களைப் பிடிக்க 40 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே புறநகர்களில் உள்ள பிற வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆராய்ந்தனர். அதில் ஏதாவது துப்பு கிடைக்கும் என்பது குறித்து ஆராயப்பட்டது. மேலும் இந்த பதிவுகளை கொள்ளைச் சம்பவம் நடந்த பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி ஊழியர்களிடமும் காட்டினர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட 2 நபர்கள், அந்த பதிவுகளில் இருந்தது தெரியவந்தது. இந்த இருவரும் கொள்ளைக் கும்பலில் இடம் பெற்றிருந்ததாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். இவர்கள் வட மாநிலத்தவர்கள் என்று தெரிகிறது. மேலும் அவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
வட மாநிலத்தவர் குறித்த கணக்கெடுப்பு
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழில், படிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் தனக்கு அனுப்பி வைக்குமாறு தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்