சத்துணவு பணியாளர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ந
சென்னை: சத்துணவு பணியாளர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு செய்வது குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில் அது கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் காலியாக உள்ள சுமார் 28,500 பணியிடங்களை நிரப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஊனமுற்றோர் சம வாய்ப்புச்சட்ட விதியின்படி 3 சதவிகித இட ஒதுக்கீடு பின் பற்றப்படவில்லை.
எனவே, ஊனமுற்றோர் சம வாய்ப்புச் சட்டத்தின்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் பணியாளர் நியமனத்தில் 3 சதவீத இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அதற்காக போடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டை சத்துணவு மற்றும் ஊட்டச்சத்துப் பணியாளர் நியமனங்களில் அமல்படுத்துவது குறித்து இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.