ராஜீவின் ரத்தத்தில் வென்றவர்கள் பின்னர் நன்றி மறக்கவில்லையா?-சந்திரகுமார்
சென்னை: ராஜீவின் ரத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் பின்னர் காங்கிரஸைக் கைவிடவில்லையா. இதுதான் நன்றி மறந்த செயல். நாங்கள் நன்றி மறந்தவர்கள் அல்ல என்று தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளரும், தேமுதிக கொறடாவுமான வி.சி.சந்திரகுமார் பேசினார்.
அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணி உடைந்து சிதற சந்திரகுமார் சட்டசபையில் பேசிய பேச்சுதான் முக்கியக் காரணமாக அமைந்தது. இவர் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து சரமாரியாக கேள்வி கேட்க கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா தேமுதிகவை பிடி பிடியென பிடித்து கூட்டணியை விட்டு விரட்டி விட்டார்.
இதனால் சந்திரகுமாரின் பேச்சுக்கு நேற்று பெருத்த வரவேற்பு காணப்பட்டது. சந்திரகுமார் பேசுகையில், பால் விலை, பஸ் கட்டண விலை உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு ஏற்றியிருக்க வேண்டியதுதானே என்று மட்டும்தான் சட்டசபையில் கேட்டேன்.
இதற்கு நேரடியாகப் பதில் அளிக்க முடியாத முதல்வர் ஜெயலலிதா, திசை திருப்பும் வகையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட திராணி இருக்கிறதா என்று கேட்டார்.
அ.தி.மு.க. பலத்தால்தான் தே.மு.தி.க. வெற்றிபெற்றது என்று கூறி தே.மு.தி.க.வுக்கு நன்றி இல்லை என்றும் ஜெயலலிதா கூறினார். எம்.ஜி.ஆர்.தான் ஜெயலலிதாவை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அதை மறந்துவிட்டு ஏதோ தானே சுயம்புவாக வந்ததுபோல ஜெயலலிதா பேசி வருகிறார்.
ராஜீவ் காந்தி மறைந்த பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. ராஜீவ் காந்தியின் ரத்தத்தால் வெற்றிபெற்றவர்கள் பின்னர் காங்கிரஸைக் கைவிடவில்லையா? இது நன்றி மறக்கும் செயல் இல்லையா?'
இப்படிப்பட்டவர் எங்களை நன்றி மறந்தவர்கள் என்கிறார். நாம் என்றுமே நன்றி மறந்தவர்கள் கிடையாது என்பதை அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்றார் சந்திரகுமார்.












Click it and Unblock the Notifications