கொலைகார மாலுமிகள் கைது விவகாரம்: வெளியுறவு இணை அமைச்சரை சந்தித்த இத்தாலிய அமைச்சர்
டெல்லி: கேரள கடல்பகுதியில் 2 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் இன்று டெல்லி வந்தார். அவர் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரனீத் கௌரை சந்தித்து பேசினார்.
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே இத்தாலி நாட்டு எண்ணெய் கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மாஸிமிலானோ லாடோர் மற்றும் சல்வடோர் கிரோன் ஆகியோர் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை கடற்கொள்ளையர்கள் என்று தவறாக நினைத்து சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதற்கு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த 2 பாதுகாவலர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி இத்தாலி அரசு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது.
இந்நிலையில் கொல்லப்பட்ட மீனவர் ஒருவரின் குடும்பத்தார் இத்தாலிய எண்ணெய் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் இன்று விசாரணைக்கு வருகின்றது. தங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தர உத்தரவிட வேண்டும். இழப்பீடு வழங்கும் வரை அந்த கப்பலை கேரளாவை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே என்ரிக்கா லெக்சீ என்னும் அந்த கப்பலில் சோதனை நடத்தி கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய கேரள மாஜிஸ்திரேட் நேற்று வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இத்தாலிய துணை வெளியுறவுத் துறை அமைசச்ர் ஸ்டாபன் டி மிஸ்டுரா இன்று காலை டெல்லி வந்திறங்கினார். அவர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வைத்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரனீத் கௌரை சந்தித்து பேசினார். அப்போது இத்தாலிய கப்பிலில் பணிபுரிந்த 2 பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இத்தாலியின் நிலைப்பாட்டை தெரிவித்தார் என்று தெரிகிறது. இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிலியோ டெர்ஸி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.