சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - அமைச்சரவை முழுவதையும் களமிறக்க அதிமுக திட்டம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணியில் 32 அமைச்சர்களையும் களமிறக்க, அதிமுக திட்டமிட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு ஒன்றியத்திற்கு 10 அமைச்சர்கள் வீதம் தேர்தல் பணியில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவற்காக 32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே தமிழக அமைச்சரவை முழுவதும் இடைத்தேர்தல் தொகுதியில் முகாமிடுவது இதுதான் முதன்முறை.
அதி்முக வேட்பாளர் முத்துசெல்வி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ததை ஓட்டி அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையான், நத்தம் விஸ்வநாதன் உள்பட 15 அமைச்சர்களும், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
ஏராளமான அதிமுகவினர் கூடியதால் சங்கரன்கோவில் நகரமே நேற்று ஸ்தமித்தது. 43 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு தவிர, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் அடங்கிய குழுவினர் ஆகியோரும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
5 வார்டுகளுக்கு 2 நகர நிர்வாகிகள், ஒரு ஒன்றிய நிர்வாகி, 2 மாவட்ட நிர்வாகிகள், 2 எம்எல்ஏக்கள், 1 அமைச்சர் என்று மொத்தம் 8 பேர் வீதம் 30 தொண்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி தொகுதி முழுவதும் உள்ள 242 வாக்குசாவடிகளுக்கும் 242 குழுக்களை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
தொகுதியில் உள்ள சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய 3 ஒன்றியங்களில் மொத்தம் 75 பஞ்சாயத்துகளும், நகராட்சியில் 30 வார்டுகளும், திருவேங்கடம் பேரூராட்சியில் 15 வார்டுகளும் உள்ளன. 34 அமைச்சர்களும் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதனால் ஒரு ஓன்றியத்துக்கு 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரசாரம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.