ராஜ்யசபா சீட்டை விற்றாரா கட்காரி?-பாஜகவில் கடும் மோதல்
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மார்ச் 30-ந் தேதி நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் எவரும் நிறுத்தப்படவில்லை.
அன்ஷூமான் என்ற லண்டன் தொழிலதிபர் பாரதிய ஜனதாவை நம்பி சுயேட்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆனால் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் இத்தகைய நடவடிக்கை கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஸ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோரிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. யஷ்வந்த் சின்ஹா மிகக் கடுமையாக பகிரங்கமாகவே கட்காரிக்குக் கண்டனம் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படாத நிலையில் கட்சிக்கே சம்பந்தமில்லாத சுயேட்சை தொழிலதிபர் அன்ஷூமானுக்கு கட்சி எம்.எல்.ஏக்களை வாக்களிக்கச் சொல்வதா? என்ற காட்டம் கட்காரி மீது அதிகரித்து வந்தது.
தமக்கு எதிராக உருவான நெருக்கடிகளைத் தொடர்ந்து கட்காரி, அனுஷ்மானை ஆதரிப்பது இல்லை என்று முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அறிக்கையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின் போது எவரையும் ஆதரிக்காமல் இருப்பது என்று முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பாரதிய ஜனதா கட்சியில் குழப்பம், கோட்டையான உடுப்பி-சிக்மகலூர் தொகுதியை இழந்தது, 15 ஆண்டுகாலமாக கைப்பற்றிவைத்திருந்த குஜராத்தின் மான்சா தொகுதியை பறிகொடுத்தது என ஒரே நாளில் கட்காரிக்கு விழுந்த அடியோடு அன்ஷூமான் விவகாரமும் சேர்ந்து கொண்டது.
கட்காரியை 2-வது முறையாக பாஜக தலைவராக நியமிக்கலாம் என்று முடிவு செய்திருந்த அதன் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ்.தான் அனுஷ்மான் விவகாரத்தில் கட்காரியை பணிய வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்ஷூமான் சாடல்
இதைத் தொடர்ந்து கட்காரியின் வேண்டுகோளை ஏற்று தமது வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக அன்ஷூமான் மிஸ்ராவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்ஷூமான் மிஸ்ரா கூறுகையில்,"எனக்கு 37 வயதுதான் ஆகிறது...நாட்டுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். நான் இளைஞன். பணத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடவில்லை. பாரதிய ஜனதாவில்தான் வயதான தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இப்போதாவது ஓய்வு பெறட்டும் என்றார்.