சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழு!

ஈழப் போர் முடிந்து இத்தனை வருடங்களாகியும் தமிழர்களுக்கு இன்னும் விமோச்சனம் கிடைக்கவில்லை. முள்வேலிக்குள் அகதிகளாக தள்ளப்பட்ட மண்ணின் மைந்தர்களான தமிழர்களை ஆடு மாடுகளை விட மிகவும் கேவலமாக நடத்தி வருகிறது சிங்கள அரசு. சற்றும் மனிதாபிமானமோ, மனித நேயமோ இல்லாமல் கொடுமையான சூழலிலேயே வைத்துள்ளது இலங்கை அரசு.
இந்த நிலையில்தான் சமீபத்தில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. அது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு நேரில் செல்கிறது. ஏற்கனவே இந்தக் குழு கடந்த பிப்ரவரியே போயிருக்க வேண்டியது. இடையில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறுக்கிட்டதால் போக முடியவில்லை.
தற்போது இவர்கள் அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ளனர். இதை சுஷ்மா சுவராஜே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினர் அடுத்த மாதம் 16-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்கள். 21-ந்தேதி திரும்புகிறோம். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுகிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கிறோம்.
பாஜக சார்பில் எம்.பிக்கள் பிரகலாத் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுகிறார்கள். எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் செய்து வருகிறார் என்றார்.
இந்தக் குழுவில் தமிழகத்திலிருந்து யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications