ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரி, ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் விசாரணை

கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி காலை வாக்கிங் போன திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை எந்தத் துப்புமே போலீசாருக்குக் கிடைக்கவில்லை. தூத்துக்குடி கவுன்சிலர் சாந்தி உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்திப் பார்த்துவிட்டனர். இன்னமும் குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை.
ராமஜெயம் முதல் நாள் இரவே கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று காலை அவரைப் பார்த்ததாக பால்காரர் ஒருவரும், ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் தெரிவித்தனர். இதையடுத்து ராமஜெயம் 29ம் தேதி காலை தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை திருச்சியில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர நெல்லையைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் ராமஜெயத்துடன் பண பரிமாற்றம் வைத்திருந்திருக்கிறார். ஆனால் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விலகிவிட்டார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் ராமஜெயம் கொல்லப்பட்ட அன்று அவர் நெல்லையில் இருந்துள்ளார். மேலும் மறுநாள் திருச்சிக்கு வந்து ராமஜெயத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்த அவர் எப்படி சரியாக கொலை நடந்த அன்று நெல்லையில் இருந்துள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயத்தைக் கொன்றது தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படை தான் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் வங்கி அதிகாரி நெல்லை தான் என்பதால் அவர் மீதான சந்தேகப் பார்வை வலுத்துள்ளது.
மற்றொரு தனிப்படை திருச்சி, மதுரை, சென்னை, கோவையில் ராமஜெயத்துடன் தொடர்பு வைத்திருந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. தனிப்படை தவிர திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனமும் இந்த கொலை வழக்கை துப்பறிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications