சென்னையில் வெறிநாய் கடித்து கவனிக்காமல் விஷம் ஏறி சிறுவன் பலி
சென்னை: சென்னையில் வெறிநாய் கடித்து கவனிக்காமல் விஷம் ஏறி சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் மஸ்தான். தனியார் நிறுவன ஊழியர். அவரது நான்கரை வயது மகன் அஜின். கடந்த மாதம் 18ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அங்கு வந்த நாயை துரத்த முயன்றான். அப்போது அந்த நாய் அவனைக் கடித்துவிட்டு ஓடிவிட்டது. இதில் சிறுவனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. உடனே மஸ்தான் தனது மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தார். ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜினின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுவனின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை சிறுவனுக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டு பரிசோதனை அறிக்கை வரும் முன்பே இறந்துவிட்டான்.
இது குறித்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை தலைவர் பி. ஜெயச்சந்திரன் கூறுகையில், சிறுவனுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் சிகிச்சையைத் தொடரவில்லை. இதனால் சிறுவனின் உடல் முழுவதும் விஷம் பரவி பலியானான் என்றார்.
அஜின் இறந்தபிறகு அம்பத்தூரில் சுற்றித்திரியும் வெறிநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வருகிறார்கள். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஜினின் உறவினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.