இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்-பாஜக தீர்மானம்
மதுரை: இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தாக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி மதுரையில் நடந்த பாஜக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுப்பதாக கூறி இதுவரை இந்த திட்டம் முழுமையடையவில்லை. விரைவில் இந்த வீடுகளை கட்டி முடிக்கவும் அந்த வீடுகளில் மீள் குடியிருப்பு செய்யவும் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை சென்று வந்துள்ள பாராளுமன்ற குழு தெரிவித்துள்ள விவரங்களின் அடிப்படையில் இந்திய அரசுக்கு இருக்கிற தார்மீக கடமை அடிப்படையில் இலங்கை தமிழர் புனர்வாழ்வுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு இலங்கையை நிர்பந்திக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தொடர்ந்து இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அநியாயமாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதும் ஒரு தொடர்கதையாகவே உள்ளது. இனிமேலாவது இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் நீண்ட நாள் கனவான சேதுசமுத்திர திட்டத்தை வாஜ்பாய் அரசு திட்டமிட்ட 4-வது வழித்தடத்தில் நிறைவேற்றியிருந்தால் ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலேயே நிறைவேற்றியிருக்க முடியும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
பாசன நீர் பற்றாக்குறை, இடுபொருள் விலை உயர்வு ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளனர். எனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகள் கடன்கள் முழுவதையும் மத்திய, மாநில அரசுகளே 1979ம் ஆண்டு செய்ததுபோல் தனியார் கடன்களையும் ஈடு செய்து ரத்து செய்ய கேட்டுக்கொள்வது,
கரும்பு டன்னுக்கு ரூ.2, 500ம், நெல்லுக்கு ரூ.1, 500ம் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
அகல ரயில் பாதைத் திட்டங்கள்
தென்னக ரெயில்வேயில் சென்னை-மதுரை, மதுரை-தூத்துக்குடி-நாகர்கோவில் பிரிவில்தான் அதிக வருமானம் வருகிறது. ஆனால் தென்மாவட்டங்கள் ரெயில்வே துறையினரால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
எனவே செங்கல்பட்டு-மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில்பாதை திட்டத்தையும், விருதுநகர்-அருப்புக்கோட்டை-மானாமதுரை அகல ரெயில் பாதை திட்டத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். மதுரை-தேனி-போடி-கோட்டயம் அகல ரெயில் பாதை திட்டத்தையும், ஆய்வுப்பணி முடித்த மதுரை-மேலூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை திட்டம், போடி-குமுளி, திண்டுக்கல்-பொள்ளாச்சி-பாலக்காடு அகல ரெயில்பாதை திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும்.
பூரண மது விலக்கு தேவை
தமிழக அரசு மத பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளையும் சமமாக பாவித்து மத்திய அரசின் கல்வி உதவி தொகையை ஏழை இந்து குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசு தமிழர்களின் நலன்கருதி, வளர்ச்சியை கருதி மதுபான கடைகளை மூடிவிட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இவை போக மேலும் பல தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.