ஒரே மாதிரி செட்டாப் பாக்ஸ் வேண்டும்: கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தும் நிலையை உருவாக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேபிள் டி.வி. உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை நகரங்களில் ஜுன் மாதம் இறுதிக்குள் கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதால், செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கேபிள் டி.வி. ஒளிபரப்பை பார்க்க முடியும் என்ற நிலை உருவாக உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
செட்டாப் பாக்ஸ் வைப்பதற்கு 6 மாதம் கால நீட்டிப்பு கேட்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான செட்டாப் பாக்ஸ்களை உபயோகப்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.