ஓய்ந்தது புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரசாரம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.
புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி கார் விபத்தில் இறந்தார். இதையடுத்து காலியாக உள்ள அந்த தொகுதிக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கி 25-ந்தேதி முடிந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இந்தத் தேர்தலை திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்து விட்டன. அதிமுகவும், தேமுதிகவும் தான் நேரடி மோதலில் உள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாநத், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர்.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தேமுதிக சார்பில் ஜாகிர் உசேனும் போட்டியிடுகி்ன்றனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று மாலை 5 மணிக்குப் பிரசாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தொகுதியில் முகாமிட்டுள்ள வெளியூர்வாசிகள் வெளியேற்றப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை தொகுதியில் மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 20 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் ஒரு மையத்திற்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜூன் 12ம் தேதி புதுக்கோட்டையில் வாக்குப பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. பதிவான வாக்குகள் வருகிற 15-ந்தேதி அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டு அன்று பகலில் முடிவு அறிவிக்கப்படும்.