பழனி காவல் நிலையம் முன்பு அதிமுக நிர்வாகி தீக்குளிப்பு
திண்டுக்கல்: பழனி அருகே பொதுப்பாதை பிரச்சனை காரணமாக அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி, கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (50). அதிமுக நிர்வாகி. அவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் வைரம் பெருமாள் எனபவருக்கும் இடையே பொதுப் பாதைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது குறித்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வைரம் பெருமாள் பொதுப் பாதையை மறைத்து சுவர் எழுப்பியுள்ளார். இதனால் கனகராஜ் பொது நடைபாதை கேட்டு முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்துள்ளார். ஆனால் இது குறித்து உரிய நவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஆயக்குடி காவல் நிலையம் முன்பு கனகராஜ் நியாயம் வேண்டி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன், காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்ற கனகராஜை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய கனகராஜை பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications