தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்க முடியாது: நிதிஷ்குமார்
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நிதிஷ்குமார், பிரதமர் பதவியில் மதச்சார்பற்ற ஒருவர்தான் அமர வேண்டும் என்றார். மேலும் பிரதமர் பதவிக்கு தாம் ஆசைப்படவில்லை என்றும் மிகப் பெரிய கட்சி ஒன்றிலிருந்துதான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வரப்போகும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை இப்போதே தெளிவுப்படுத்திட வேண்டும், அவர் மதச்சார்பற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
இதேபோல் பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியுடன் தமக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. இந்த உறவை சீர்குலைக்க வெளிசக்திகள் முனைந்தால் அதற்கு நான் உடன்படமாட்டேன் என்று மோடியை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் நிதிஷ். அண்மையில் பீகார் மாநிலத்தில் சாதிய அரசியல் முதன்மைப்படுத்தப்படுவதால் அந்த மாநிலம் வளர்ச்சி அடையவில்லை என்று கூறியிருந்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.