'இந்து' என்று சொல்லிக் கொள்ள நிதிஷ்குமாருக்கு பயம்: ஆர்எஸ்எஸ்
நரேந்திர மோடி தான் பிரதமர் பதவிக்கு சரியான ஆள் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
மோகன் பகவத் கூறுகையில், நிதிஷ் குமாருக்கு தான் ஒரு இந்து என்று கூறிக் கொள்வதில் பயம் இருக்கிறது.
பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்து பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆலோசனை நடத்தித் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் நிதிஷ் குமாருக்கு இல்லை.
மேலும் பிரதமர் பதவிக்கு சரியான ஆள் நரேந்திர மோடி தான். இந்துத்துவாவை ஏற்பவர் மட்டுமே பிரதமராக வேண்டும். இந்துத்துவாவை ஆதரிப்பவர் பிரதமராக இருப்பது என்ன தவறு?.
நிதிஷ்குமார் தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு பேசுகிறார் என்றார் பகவத்
இதற்கிடையே நிதிஷ் குமாரின் கருத்துக்கு பிகார் மாநில பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிகாரில் நிதிஷ்குமாரின் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜக அமைச்சர்களும் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிகார் மாநில கால்நடைத்துறை அமைச்சரும் நரேந்திர மோடி ஆதரவாளருமான கிரிராஜ் சிங் கூறுகையில், தங்களது வசதிக்காக சில போலி மதசார்பின்மைவாதிகள் மதசார்பின்மை என்ற தொப்பியை அணிந்து ஏமாற்றப் பார்க்கின்றனர். பாஜகவின் உதவி தேவைப்பட்டால் மதசார்புத்தன்மையை ஏற்கவும், தேவைப்படாவிட்டால் மதசார்பின்மையை ஆதரிக்கவும் இவர்கள் தயார்.
அந்த மாதிரி தலைவர் தான் நிதிஷ் குமார். வாஜ்பாயின் அமைச்சரவையில் இருந்து அதிகாரத்தை அனுபவித்த நிதிஷ் குமாரும் ராம் விலாஸ் பாஸ்வானும் இப்போது மதசார்பற்ற தலைவர்களாகிவிட்டனர் என்றார்.