பிரணாப் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல்: முன்மொழிந்து கருணாநிதி கையெழுத்து
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வரும் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவில் பிரணாபை முன்மொழிந்து திமுக தலைவர் கருணாநிதி தான் கையெழுத்து போட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் இந்த வாரத்தில் தனது மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வருகிற 28ம் தேதி மனுதாக்கல் செய்கிறார். இதற்காக 4 பிரதிகள் கொண்ட வேட்பு மனுக்கள் தயாராகி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பிராணாப் முகர்ஜியை வேட்பாளராக முன் மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வேட்பு மனுக்களில் 46 பேர் வழிமொழிந்து கையெழுத்திடவுள்ளனர்.
அவரது வேட்பு மனு பிரதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பிக்கள், மற்றும் ஆதரவு கட்சி எம்.பிக்கள் வழிமொழிந்து கையெழுத்திடும்படி பிரணாப் முகர்ஜியின் தேர்தல் பிரசார குழு கேட்டுக் கொண்டுள்ளது.
வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் பிரணாப் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.