குஜராத் கலவரத்தையடுத்து மோடியை பதவி நீக்க வாஜ்பாய் திட்டமிட்டார்: நிதிஷ்
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போதே தெரிவிக்க வேண்டும், நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தக் கூடாது, மதசார்பற்ற ஒருவர் தான் பிரதமராக வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனை விதித்துள்ளார் அந்தக் கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ்குமார்.
இதையடுத்து நிதிஷ்குமாருக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமையும் நிதிஷ்குமாரை கண்டித்துள்ளது.
மதசார்பின்மை பற்றி பேசும் நிதிஷ்குமார், குஜராத் கலவரம் நடந்தபோது வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது அவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடிக்கு எதிராக மீண்டும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார் நிதிஷ்குமார். அவர் கூறுகையில், மதசார்பற்ற தலைவர் ஒருவர் தான் பிரதமராக வேண்டும். அது தான் என் இறுதி முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. நரேந்திர மோடியை பாஜக பிரதமராக முன் நிறுத்துவதை ஏற்க முடியாது.
குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி கையாண்ட விதத்தை வாஜ்பாயே ஏற்கவில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.
2004ம் ஆண்டில் பாஜக மத்தியில் ஆட்சியை இழந்ததற்குக் காரணமே குஜராத் கலவரமும் அதை மோடி கையாண்ட விதமும் தான். அந்தக் கலவரத்தின்போது ராஜ தர்மத்தைக் காக்க மோடி தவறிவிட்டார் என்றார்.
இதன்மூலம் மோடியை வாஜ்பாயே ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார் நிதிஷ்குமார்.