காவிரி விவகாரம்: யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன?- விஜய்காந்த்
இது தொடர்பாக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கும் கடந்த ஜுன் 12ம் தேதியே மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் மேட்டூர் நீர்த் தேக்கத்தில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் விட மறுப்பதே காரணம். முல்லை பெரியாறு நீர்த்தேக்கத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கூட நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியவில்லை.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் குடி தண்ணீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுவது பாலாறு. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயலுகிறது. அதையும் தடுப்பார் யாரும் இல்லை.
நெய்யாற்றின் இடதுகரைக் கால்வாய் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் பயன்பெற்று வருகிறது. கேரள அரசு அண்மை காலமாக இதிலேயும் தண்ணீர் விட மறுத்து வருகிறது.
இவ்வாறாக பல வகையிலும் தமிழ்நாடு பாதிப்புக்கு ஆளாகிறது. வெள்ளம் வந்தால் மட்டும் வடிகாலாக தமிழ்நாட்டை பயன்படுத்துகின்றனரே தவிர, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு சூறையாடப்படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலில் சென்று நிம்மதியாக மீன் பிடித்து வாழ முடியவில்லை. இலங்கை அரசுக்கு கச்சத்தீவை கொடுத்தது மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழர்களின் இனப் படுகொலைக்கும் இந்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது.
சீனர்கள் ஆட்சி நடத்தும் சிங்கப்பூரில் கூட ஆரம்பம் முதல் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் ஆட்சி மொழியாக தமிழும் இடம் பெற வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் இன்னும் இடம் பெறவில்லை.
ஆனால் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் மத்திய தேர்தல்கள் நடைபெறும் போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தவறாது கலந்து கொண்டு தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இவற்றால் கண்ட பயன் என்ன?.
ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனரே தவிர, அவர்களது குறையை கேட்கவோ, அவற்றை களையவோ மத்தியில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டணிக் கட்சியினரும் எதுவும் செய்ய இயலவில்லை.
தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு தீராத பிரச்சனைகள் பல்லாண்டுகளாக இருந்தும் அவற்றைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? என்று எண்ணுகிறபோது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதே தமிழ்நாட்டிற்கு செய்கிற நன்மையாகும்.
ஆகவே தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானித்துள்ளது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.