மதுரையிலிருந்து விரைவில் சர்வதேச விமான சேவை தொடங்கும்-அஜீத் சிங்
இதுதொடர்பாக அவர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில்,
மதுரையில் விரைவில் சர்வதேச சேவை தொடங்கப்படும். முதலாவதாக, மதுரையில் இருந்து கொழும்புக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையைத் தொடங்க அனுமதி அளித்துள்ளோம் என்றார்.
பயணிகள் விமான சேவைக்கான சர்வதேச உடன்படிக்கையில் மதுரையின் பெயர் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறதே. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சேவை தொடங்க இயலாத நிலை உள்ளதா? என்ற கேள்விக்கு, அத்தகைய ஒப்பந்தம் பரஸ்பர அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. மதுரையில் இருந்து கொழும்புக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். படிப்படியாக இது மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறைப்படியே இண்டிகோ, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் புதிய வழித்தடத்தில் சேவையைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அஜீத் சிங்.
தமிழ்நாட்டில் சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை தொடங்க அனுமதி அளிக்கப்படுமா? என்ற மற்றொரு கேள்விக்கு,
வடக்கே பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களுக்கு பயணிகள் ஹெலிகாப்டர் வசதி உள்ளது. தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா, பிருந்தாவனம் செல்ல சிறிய ரக விமானம், ஹெலிகாப்டர் சேவை விரைவில் அறிமுகமாகும் என்று பதிலளித்தார்.
சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்து அவர் பதிலளிக்கையில், -
விமான நிலையத்தின் வருவாயில் 46 சதவீதம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் வசம் உள்ளது. சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு மத்திய திட்டக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். விமான நிலையத்தைத் தனியார்மயம் ஆக்குவது சிறந்த தீர்வாக இருக்கும்.
விமான நிலையம் என்பது விமானங்களுக்கான நிறுத்தம் மட்டும் கிடையாது. அங்கு வரும் பயணிகளுக்கு வேண்டிய வசதிகள், தங்குமிடம், வாகன நிறுத்துமிடம், உணவகம், ஓய்வறை போன்ற கட்டமைப்புகளைக் கொண்ட இடமாக இருக்க வேண்டும். இத்தனைப் பணிகளை விமான போக்குவரத்துத் துறையால் செய்ய முடியாது என்றார்.
சென்னை விமான நிலையத் தனியார்மயத் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசித்தீர்களா? என்ற கேள்விக்கு, இதுவரை பேசவில்லை. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பதிலளித்த அஜீத் சிங், தூத்துக்குடி, சேலம் போன்ற சிறிய விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். விமான சேவை மேம்பட வேண்டுமானால், பெருநகரங்கள் அல்லாத இடங்களிடையே விமான சேவை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.