200 ஆண்டு பழமை வாய்ந்த தஸ்தகீர் சாகிப் தர்கா தீ: ஸ்ரீநகரில் ஊரடங்குச் சட்டம்?
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் வரலாற்று சிறப்புமிக்க தஸ்தகீர் சாஹிப் தர்காவில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகரில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தஸ்தகீர் சாஹிப் தர்கா உள்ளது. அங்கு தான் புனிதர் கவுஸ் இ ஆசாம் அடங்கியுள்ளார். அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இந்த தர்காவில் இன்று காலை 6.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ ஆக்ரோஷத்துடன் கொழுந்துவிட்டு எரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். அந்த தர்காவில் அடங்கியுள்ள கவுஸ் இ ஆசாமின் நினைவுச் சின்னங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. தர்கா மரத்தால் ஆனது என்பதால் முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணீர் விட்டனர். தீயணைப்புத் துறையினரின் மெத்தனத்தால் தான் தர்கா முழுவதும் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறி அவர்கள் மீது உள்ளூர்வாசிகள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தர்கா அமைந்திருக்கும் கன்யார் பகுதி காவல் நிலையத்தையும் கற்கள் வீசித் தாக்கினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும் போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.
அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை போலீஸ் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.