சங்மாவும் மனு தாக்கல்.. முன்மொழிந்து அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் கையெழுத்து!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
அவரது பெயரை முன்மொழிந்து அதிமுக எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகியவை தவிர்த்த பாஜக கூட்டணியின் ஆதரவும், அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவும் சங்மாவுக்கு உள்ளது.
ஆனால், காங்கிரஸ் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்ட கூட்டணிக் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜியின் ஆதரவும் இதுவரை சங்மாவுக்குக் கிடைக்கவில்லை. அவரை சங்மா சந்தித்துப் பேசினாலும் எந்த உத்தரவாதத்தையும் மம்தா தரவில்லை.
ஆனாலும் சங்மா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஒடிஸ்ஸா முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அதிமுக எம்பி தம்பிதுரை, ஷிரோமனி அகாலி தளம் கட்சியின் பிரதிநிதியுடன் வந்து சங்மா தனது வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னதாக இவரை முன்மொழிந்து அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சங்மாவின் வேட்பு மனு பிரதிகளில், அவரை முன்மொழிந்து கையெழுத்திட்டனர்.












Click it and Unblock the Notifications