சத்தீஸ்கர் படுகொலை: ப.சிதம்பரம் பதவி விலக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் 200 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சி.ஆர்.பி.எப். முகாமிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளையே படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. இதை உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி சச்சார், சுவாமி அக்னிவேஷ், பி.டி. சர்மா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்க மன்னிப்பு கோரவும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகவும் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சுட்டுக் கொன்றது மாவோயிஸ்டுகள்தான் என்றும் சிறுவர்களை மாவோயிஸ்டுகள் தங்களது படையில் சேர்த்திருக்கின்றனர் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications