இலங்கையில் செய்திகளை வெளியிடும் வெப்சைட்டுகளை கட்டாயம் பதிவு செய்யனும்
கொழும்பு: இலங்கையில் செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களை கட்டாயம் பதிவு செய்யும் வகையில் இலங்கை பத்திரிகை சபை சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல கூறியதாவது:
செய்திகளை வெளியிடும் இணையத் தளத்தை புதிதாக பதிவதற்காக ஒரு இலட்சம் ரூபாயும் அதனை புதுப்பிப்பதற்காக ஆண்டுதோறும் ஐம்பதாயிரம் ரூபாயும் செலுத்தப்பட வேண்டும். இதற்கான சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சில இணையத் தளங்கள் தனிநபர்களின் நடத்தைகளுக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன. இத்தகைய இணையத் தளங்கள் இயங்குவதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சிலர் இணையத் தளங்களை பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.