சென்னை பைனான்சியர் கொலை வழக்கில் நெல்லை கூலிப்படையினர் கைது
நெல்லை: சென்னை பைனான்சியர் கொலை வழக்கில் நெல்லை கூலிப்படைக்கு தொடர்புள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை போலீசார் நெல்லை வந்து கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மேற்கு அண்ணாநகரில் வசித்து வந்தவர் ரமேஷ். வட மாநிலத்தைச் சேர்ந்த அவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். சென்னை வடபழனியில் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். ரமேஷ் தனது தொழில் தேவைக்காக ஆறுமுக நயினாரிடம் அடிக்கடி வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம். ரமேஷ் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாமல் அதை வைத்து ரேஸ் ஆடியுள்ளார். ஆறுமுக நயினார் பலமுறை கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோதும் ரமேஷ் சாக்குபோக்கு சொல்லி வந்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு இருதரப்பையும் விசாரித்து அனுப்பினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுக நயினார் ரமேஷை தீர்த்து கட்ட எண்ணினார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி கிண்டி ரேஸ்கோர்சுக்கு ரமேஷ் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கார் பார்க்கி்ங் அருகே நின்று கொண்டிருந்த ரமேஷை ஆறுமுக நயினார் மற்றும் கூலிப்படையினர் சரமாரியாக வெட்டினர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்தனர். இதற்கிடையே ஆறுமுக நயினார் கடந்த 13ம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் கொலையில் ஈடுபட்டது நெல்லையைச் சேர்ந்த கூலிப்படை என தெரிய வந்தது. இதை அடுத்து சென்னை போலீசார் நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி ராஜ்குமார், சுந்தர் ஆகியோரை பிடித்து சென்னை கொண்டு சென்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.