கல்யாணமாகி 55 வருஷமாச்சு, இதுவரை சண்டையே போட்டுக் கொண்டதில்லை..பிரணாப் மனைவி

தனது கணவர் பிரணாப் முகர்ஜி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்திருப்பதால் பெரும் பூரிப்பிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துள்ளார் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா. மேலும் முதல் வங்காலி குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பிரணாபுக்குக் கிடைத்திருப்பதால் அவரது மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.
அந்த சந்தோஷ பூரிப்பில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியின் சுவாரஸ்யமான பகுதிகள்...
நாட்டின் முதல் குடிமகளாகியுள்ளீர்கள், எப்படி உணர்கிறீர்கள்?
பலத்த சிரிப்புடன் ரொம்ப வியப்பாக இருக்கிறது. எனது மகள் இங்கே வந்துள்ளார். மகனும் வரப் போகிறார். அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளோம்.
பிரணாப் முகர்ஜிதான் முதல் வங்காலி குடியரசுத் தலைவர். அவரைப் பாராட்டினீர்களா...
இல்லை, இல்லை, எங்களுக்குள் பார்மாலிட்டிகள் எல்லாம் கிடையாது. நாங்கள் இந்தக் காலத்து ஜோடி கிடையாது. அந்தக் காலத்து ஜோடி. இப்போது உள்ளது போல ஆர்ப்பாட்டமான உறவெல்லாம் இல்லை. எங்களது உணர்வுகளை அமைதியான முறையில்தான் வெளிப்படுத்திக் கொள்வோம். மனசுக்கும், இதயத்துக்கும் இடையிலான் பேச்சு இருக்கும். காதல் மொழி கூட இதுவரை நாங்கள் பேசிக் கொண்டது கிடையாது. இந்த வயதில் இருவரும் ஒருவரை ஒருவர் அன்பால் அரவணைத்துக் கொள்வதுதான் முக்கியம்.
அவர் என் மீது காட்டும் அன்பும், காதலும் வித்தியாசமானது. தினசரி காலை குளித்து முடித்ததும், என்னிடம் வருவார்.எனது நெற்றியைத் தொட்டபடி சில மந்திரங்களை உச்சரிப்பார். தினசரி இதைச் செய்வார். ஒரு நாள் கூட தவறியதில்லை. கல்யாணமானது முதல் இதைச் செய்து வருகிறார். இப்படித்தான் என் மீதான அன்பை அவர் உணர்த்துவார். எங்களுக்கு கல்யாணமாகி 55 வருடங்களாகி விட்டது. ஆனால் ஒரு நாள் கூட நாங்கள் சண்டை போட்டுக் கொண்டது கிடையாது தெரியுமா...!
சரி, குடியரசுத் தலைவருக்கு என்ன சிறப்புப் பரிசு வைத்துள்ளீர்கள்...?
அன்பைத் தவிர வேறு என்ன தர முடியும்..
அவர் உங்களுக்குப் புது சேலை எடுத்துக் கொடுத்தாரா?
எதுக்குப் புது சேலை. மற்ற நாட்களில் கட்டுவதைப் போலத்தான் அன்றும் கட்டப் போகிறேன். அதில் விசேஷம் ஏதும் இல்லை. அதை விட முக்கியம் அவர் எனக்குப் புது சேலை எடுத்துக் கொடுத்ததே இல்லை. நான்தான் சொன்னேனே அவர் மற்றவர்களை விட வித்தியாசமானவர். அவருக்கு வேலைதான் உயிர் மூச்சு, அதுதான் வாழ்க்கை. வேலை போக புத்தகம் படிப்பார். சும்மா இல்லை, விடிய விடியக் கூட படிப்பார்.
வெற்றிச் செய்தி வந்ததும் அவருக்காக என்ன சிறப்பு பலகாரம் செய்தீர்கள்?
அவருக்குப் பிடித்தமானதைச் செய்யவே ஆசையாக இருந்தேன். ஆனால் அன்று பார்த்து எனக்கு உடல் நலம் சரியில்லை. அவருக்கு பாஸ்டோ, ஜிங்க் பாஸ்டோ என்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை நான் சொல்லச் சொல்ல வீட்டில் இருந்தவர்கள் சமைத்தார்கள்.
ராஷ்டிரபதி பவனில் 340 அறைகள் இருக்கிறதாம். அதில் என்னென்ன செய்யலாம் என்று உங்களிடம் ஆலோசித்தாரா?
இல்லை, அவருக்கும், இதற்கும் ரொம்பதூரம். வீட்டு வேலையெல்லாம் அவருக்குத் தெரியாது. அதெல்லாம் என்னோட டிபார்ட்மென்ட். நாங்கள் டெல்லிக்கு வந்தபோது, மிகச் சிறிய வீட்டில்தான் வசித்தோம். இப்போது பெரியதாக கிடைத்துள்ளது. அதை எப்படி நிர்வகிப்பது என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும். எனக்கு என்னோட தம்புராவும், ஹார்மோனியமும் ரொம்ப முக்கியம். அதற்கு ஒரு நல்லஇடம் தர வேண்டும். வீட்டுக்குள் ஒரு கோவில் போன்ற பூஜை அறையை அமைக்க வேண்டும். அதுதான் எனக்கு இப்போது பெரிய கவலையாக இருக்கிறது.
இப்போது பக்கத்தில் இல்லையே என்று யாரைப் பற்றியாவது உணர்கிறீர்களா?
எனக்கு ஒரு மகன் பிறந்தான், பிறந்ததுமே இறந்து விட்டான். அவனைத்தான் இப்போது நான் நினைத்துக் கொள்கிறேன். எனது மாமனார், மாமியார், எனது தாயார் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் ஆசிர்வாதமெல்லாம் இவருக்கு நிச்சயம் உண்டு. எனது மருமகன் ஒரு நாள் அமைச்சரவார் என்று எனது அம்மா எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் நானோ, அப்படியெல்லாம் சொல்லாதே என்று கூறுவேன். ஆனால் அவரது வாக்குதான் பின்னாளில் பலித்தது.
இன்று அவரது மருமகன் அமைச்சராக மட்டுமல்ல, நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்துள்ளார். அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் பூரித்துப் போயிருப்பார். அதேபோல இந்திர காந்தியையும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். அவருக்கும், பிரணாபின் உயர்வு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
சரி, மமதா பானர்ஜி, அப்படி எதிர்த்தாரே, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...
அயய்யோ, எனக்கும், அரசியலுக்கும் 10 லட்சம் அடி தூரம், ஆளை விடுங்க...!












Click it and Unblock the Notifications