ஸ்ருதி வழக்கை தொடர்ந்து கண்காணிப்போம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ருதி விவகாரத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளைத இன்று உயர்நீதிமன்ற விசாரணை வெளிப்படுத்தியது. அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனிடம் இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
தலைமை நீதிபதி தனது உத்தரவின்போது கூறுகையில், செய்தித் தாள்களில் சில நாட்களில் இந்த செய்தி அப்படியே மறைந்து போய் விடும். மக்களும் கூட மறந்து விட்டு அடுத்த வேலைக்குப் போய் விடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். தொடர்ந்து இந்த வழக்கை நேரடியாக கண்காணிக்கப் போகிறோம்.
இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் அரசின் நடவடிக்கைகள், கல்வித்துறையின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதை நாங்கள் கண்காணித்து வருவோம் என்றார்.
பின்னர் அரசு தலைமை வழக்கறிஞரிடம், பள்ளிக்கூடத்தை மூடுவது குறித்து கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதே,அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டார் தலைமை நீதிபதி. அதற்கு பள்ளித் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில்,இப்போது ஸ்ருதி படித்த பள்ளிக்கூடத்தை மூடினால், மற்ற மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துரைத்தார்.
இதையடுத்து இன்னும் 2 வாரத்திற்கு பள்ளியை மூடுவது தொடர்பான முடிவை எடுக்கத் தேவையில்லை. அதுகுறித்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.