ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: குற்றவாளிகளை கைது செய்ய ஞானதேசிகன் கோரிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில் அருகே மணக்குடியில் ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் சிமெண்ட்டாலான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியி்ன் சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த 1992ம் ஆண்டு மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்துவிட்டனர்.
சிலை சேதமடைந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டு இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மணக்குடி காங்கிரஸ் தலைவர் நர்சீசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலையை உடைத்தவர்கள் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவில் மணக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள ராஜீவ் காந்தியின் சிலை சில விஷமிகளால் உடைக்கப்பட்ட நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதற்கு காரணமானவர்களை காவல்துறை விரைந்து கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் என்று நம்புகிறேன்.
வன்முறை கலாச்சாரத்தை, அரசியல் ரீதியான வெறுப்புணர்வுகளை, இன உணர்வுகளை கிளப்பிவிடுகிற தீவிரவாத பேச்சுக்கள் தமிழகத்தில் அண்மைக் காலமாக தலையெடுத்து வருகிறது என்பதை எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்றார்.