இனி செல்போன் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: அமைச்சர் முகுல்ராய் தகவல்
டெல்லி: செல்போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த அடுத்த 3 மாதங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் உறுதியளித்துள்ளார்.
மக்களவையின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முகுல்ராய் அளித்த பதில்:
ரயில் டிக்கெட் முன் பதிவில் போலி ஏஜெண்டுகளைப் பிடிக்க கடந்த 4 மாதங்களில் நாடு முழுவதும் 77,000 முறை திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டுóள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 5,125 போலி ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையதள முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே துறை கொண்டு வந்த சாஃப்ட்வேரைச் சிலர் முடக்கிவிட்டனர். தற்போது பிரத்யோக சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பாக 3 மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
சென்னை திரிசூலத்தில் ரயில்கள்
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று அதிமுகவின் ஓ.எஸ். மணியன் புகார் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ரயில்வே துறை இணை அமைச்சர் முனியப்பா, அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் திரிசூலத்தில் நின்று செல்வது இயலாது என்றார். இருப்பினும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் வசதிக்காக சில ரயில்கள் அங்கு நின்று செல்வதற்கு ரயில்வே துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.