ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெகு ஜோராக 24 மணி நேரமும் உணவு விநியோகம்
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும், வலுவான லோக்பால் மசோதா தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் 3 நாட்களில் நிறைவேறுமா என்பதைவிட உண்ணாவிரதப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளில்தான் ராம்தேவ் குழுவினர் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் நுழையும் இடத்தில் பதிவு, உணவு- தண்ணீர் ஏற்பாடுகள் பற்றிய தகவலுக்கு தனி அரங்கு என ஏகப்பட்ட அரங்குகளை திறந்து வைத்துள்ளனர். மேலும் 24 மணி நேரமும் பக்காவாக சூடான உணவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்போருக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடமாடும் கழிவறைகள், குளியலறைகள் என வெகுஜோராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராம்தேவ் உண்ணாவிரதப் பந்தலில் கூட்டம் களைகட்டியிருக்கிறது.
ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோரில் செல்போன்கள் காணாமல் போயின. இன்னும் சிலரது பணம் திருட்டு போனது. இப்படி திருட்டில் ஈடுபட்டதாக சிலரை ராம்தேவ் ஆதரவாளர்கள் பிடித்து போலீசிலும் ஒப்படைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை தண்டிக்க வேண்டாம் என்று ராம்தேவ் கூறிவிட்டாராம்.
அன்னா ஹசாரே மாதிரி இல்லாமல் பக்காவா "ஸ்கெட்ச்" போட்டு கூட்டத்தை சேர்த்திருக்கும் ராம்தேவ் கை தேர்ந்த அரசியல்வாதிதான்!