இப்போ ஏத்துனா ரூ.1.37, அடுத்த வாரம் ஏத்துனா ரூ.3... இது பெட்ரோல் விலை மிரட்டல்!
சமீப காலமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகக் கடுமையாக சரிந்து விட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எண்ணை நிறுவனங்கள் அதிகம் செலவழிக்க வேண்டியதுள்ளது.
இந் நிலையில் மத்திய அரசின் மானியம் தாமதமானதால் எண்ணை நிறுவனங்களுக்கு வட்டி செலவினமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ. 22,451 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 9,249 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 8,240 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும்.
இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு உடனடியாக ரூ. 1.37 உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவாரத்தில் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மத்திய அரசை இந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.