மெகந்தி வதந்தியை பரப்பிய பெண்: போலீஸ் கண்காணிப்பு!
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஞாயிறன்று இஸ்லாமிய பெண்கள் தங்கள் கைகளில் மெகந்தியும், மருதாணியும் போட்டு அலங்கரித்துக் கொண்டனர். ஆனால் மெகந்தி வைத்துக் கொண்டவர்கள் இறந்து போனதாகவும், அலர்ஜியால் பாதிக்கப்பட்டு எரிச்சல் ஏற்படுவதாகவும் ஞாயிறு இரவு தமிழ்நாடு முழுவதும் எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரவியது. இதனால் ஏற்பட்ட பரபரப்பில்
தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் மெகந்தி வைத்துக்கொண்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் பீதிக்குள்ளானார்கள். இதனால் நள்ளிரவில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்து விட்டு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறிய பின்னரும் பல பெண்கள் திருப்தியடையாமல் தங்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கட்டாயப்படுத்தினர்.
சென்னை மட்டுமல்லாது வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 12 மணிக்கு மேல் சாலைகளில் நின்று இதைப் பற்றி பொதுமக்கள் அச்சத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இதுபோன்ற பகுதிகளுக்கு போலீசார் விரைந்து சென்று ஒலி பெருக்கி மூலமாக விடிய விடிய அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர். கைகளில் மெகந்தி வைத்துக் கொள்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. யாரும் அச்சமடைய வேண்டாம் என்று போலீசார் கூறிய பின்னரே பலர் தங்களது வீடுகளுக்குள் சென்றனர்.
இந்த மெகந்தி பீதியை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பியது யார் என்பதை சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் கண்டறிந்துள்ளனர். இளம்பெண் ஒருவர், தனது செல்போனில் இருந்து, மெகந்தி தொடர்பான எஸ்.எம். எஸ்.களை பலருக்கு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை பண்டிகை நாள் என்பதால் போலீசார் அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டனர். தற்போது மெகந்தி பீதி தணிந்துள்ள நிலையில் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டு பீதியை ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அப்பெண்ணை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மெகந்தி தொடர்பான தகவல்கள், பேஸ்புக்கில் தொடங்கி, பின்னர் இ-மெயில், செல்போன் எஸ்.எம்.எஸ்.க்கள் மூலமாக பரவியுள்ளன.
மெகந்தி வைத்துக் கொண்டதால் பெங்களூரில் 4 பேர் உடல் முழுவதும் அலர்ஜியாகி இறந்து விட்டனர் என்று பரவத் தொடங்கிய ஆரம்ப கட்ட எஸ்.எம்.எஸ்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. அது பற்றியும் பெங்களூர் போலீசார் துணையுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.