இளைஞர் காங்கிரசை மீண்டும் கைப்பற்றிய வாசன் அணி: ப.சி கோஷ்டி 'அப்செட்'!
தமிழக இளைஞர் காங்கிரஸ்
ராகுல்காந்தி பொறுப்புக்கு வந்த உடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர் காங்கிரஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் இளைஞர் காங்கிரஸ் அணியினருக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து சுறுசுறுப்பாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 14 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் காங்கிரஸ் அணிக்கு சேர்த்தனர். அப்போது நடந்த நிர்வாகிகள் தேர்தலில் வாசன் ஆதரவாளரான யுவராஜ் இளைஞர் காங்கிரஸ் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால் பெரும்பாலானவர்கள் உறுப்பினர் அட்டையைக் கூட புதுப்பிக்கவில்லையாம். இதனால் தற்போது 1,20000 பேர்தான் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கின்றனராம்.
முஷ்டி உயர்த்திய வாசன் - ப.சி. கோஷ்டி
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவிக்கு யுவராஜ் சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ப. சிதம்பரம் ஆதரவாளரான முன்னாள் எம்.பி ஜெயமோகன் மகன் இளஞ்செழியனும், ஈ.வி.கே.எஸ் ஆதரவு பெற்ற நாசே.ராமச்சந்திரன் மகன் ராஜேசும் போட்டியிட்டனர். இளங்கோவன், ப.சி கோஷ்டியினர் பணத்தை தண்ணீராக செலவு செய்தும் வாசன் ஆதரவு பெற்ற யுவராஜ் மீண்டும் தலைவர் பதவியை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இரண்டாவதாக வந்த ப.சி இளஞ்செழியனுக்கு துணைத்தலைவர் பதவியும், மூன்றாவதாக வந்த இளங்கோவன் ஆதரவாளர் ராஜேஷ்க்கு பொதுச்செயலாளர் பதவியும் கிடைத்திருக்கிறது.
அப்செட் ஆன ப.சி. கோஷ்டி
இதில் முக்கியமான விசயம் என்னவெனில் இளைஞர் காங்கிரசின் நிர்வாகிகள் தேர்தலில் அனைத்து தரப்பிலும் வாசன் அணியினர்தான் 60 சதவிகித இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றனராம். இதில் அதிகம் அப்செட் ஆனது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்தான் என்று சத்யமூர்த்தி பவன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஏனெனில் இளைஞர் காங்கிரஸ் அணி தேர்தல் முடிவு வந்த நேரத்தில் கார்த்தி சிதம்பரம் மலேசியாவில் இருந்தாராம். தேர்தல் முடிவுகள் தெரியவரவே அங்கிருந்தே டென்சனை வெளிப்படுத்தினாராம் கார்த்தி. எது எப்படியோ இளைஞர் காங்கிரசில் நடந்த உள்குத்தில் வாசன் அணியினர் வெற்றி வாகை சூடி அமைதியாக பதவியை பிடித்துவிட்டனர் என்கின்றனர் சத்தியமூர்த்திபவன் வாசிகள்.
பிரிக்க முடியாதது எது என்றால் காங்கிரசும் - கோஷ்டியும் என்று மாணவர் அணியில் இருந்தே கொண்டு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது.