'ரொமான்டிக்கை' விரும்பும் டெல்லிவாசிகள்; கடற்கரையை விரும்பும் மும்பைவாசிகள்!
மும்பை: கடற்கரை நகரங்களுக்குச் சென்று விடுமுறையை அனுபவிக்க மும்பைவாசிகள் விரும்புகின்றனர். அதே சமயம் துணையுடன் ரொமான்டிக்கான விடுமுறையை கொண்டாட டெல்லிவாசிகள் விரும்புகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
விடுமுறையை அனுபவிப்பது என்பது அனைவராலும் சரியாக செய்ய முடியாது. காரணம் சரியாக திட்டமிடல் இல்லாது, பணிச்சுமை போன்ற காரணங்களினால் உலக அளவில் பெரும்பாலான விடுமுறைகள் உபயோகிக்கபடாமல் காலவதியாகிவிடுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 25 முதல் 30 நாட்கள் வரை விடுமுறையை அனுபவிக்கின்றனர். ஆனால் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் மிகக்குறைந்த அளவிலான விடுமுறையை அனுபவிக்கின்றனர். இவ்வாறு விடுமுறையை சரியாக உபயோகிக்காமல் எப்பொழுது பார்த்தாலும் வேலை பற்றிய நினைப்பிலேயே காலம் தள்ளுவதால் மனஅழுத்தம் போன்ற நோய்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
விடுமுறையை எடுக்காமல் சேர்த்துவைத்து அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கின்றனர் டெல்லிவாசிகள். அதேசமயம் மும்பைவாசிகள் தங்களின் பயணத்தை சரியாக திட்டமிடாமல் விடுமுறை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது என்கிறது அந்த சர்வே.
கடந்த ஆண்டு உயரதிகாரிகளின் அப்ரூவல் இல்லாத காரணத்தால் டெல்லிவாசிகளால் சரியாக விடுமுறையை எடுக்க முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு 36 சதவிகிதம் பேர் சரியாக திட்டமிடாத காரணத்தினால் விடுமுறையை உபயோகிக்காமல் இருந்துள்ளனர். 37 சதவிகிதம் பேர் விடுமுறையை சேர்த்து வைத்து பணமாக மாற்றிக்கொள்வது தெரியவந்துள்ளது.
கடைசி நிமிட வேலைப்பணிகளினால் சிலர் விடுமுறைக் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளனர்.இந்திய நகரங்களில் உள்ளவர்கள் 32 சதவிகிதம் பேர் கடற்கரை நகரங்களில் விடுமுறையை கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர். 33 சதவிகிதம் பேர் ரொமான்டிக் விடுமுறையை அனுபவிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். டெல்லிவாசிகள் 39 சதவிகிதம் பேர் காதல் விடுமுறைக்கும், மும்பைவாசிகள் 38 சதவிகிதம் பேர் கடற்கரை விடுமுறையை விரும்புவதாக கூறியுள்ளனர்.
ஆனால், சென்னைவாசிகளுக்கு எப்போ பார்த்தாலும் வேலை வேலை தான் போலிருக்கிறது!