கஸாப் தூக்கால், சரப்ஜித் சிங் கருணை மனுவை பாக் அதிபர் நிராகரிக்க வாய்ப்பு!
1990-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், குண்டு வெடிப்புக்கு சதி வேலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.
ஆனால் குடிபோதையில் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்துவிட்டேன் என்பதுதான் சரப்ஜித் சிங்கின் வாதம். பொய்க்குற்றச்சாட்டின் கீழ் சரப்ஜித்சிங் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது என்கின்றனர் அவரது உறவினர்கள்.
கடந்த 21 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் இருந்து வருகிறார். தன்னை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு சரப்ஜித் சிங், பாக் அதிபர் சர்தாரிக்கு சமீபத்தில் கருணை மனு சமர்ப்பித்துள்ளார்.
இந்த மனு அதிபரின் பரிசீலனையில் இருப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறியிருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஜ்மல் கஸாபை இன்று காலை தூக்கில் போட்டுவிட்டது இந்தியா.
இது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவுக்கு எதிராக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கஸாபை தூக்கிலிட்டதால், இப்போது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை அதிபர் சர்தாரி நிராகரித்துவிட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.