கேசுபாய் பட்டேல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பான்டியா மனைவி!
ஹரேன் பான்டியா யார்?
குஜராத் மாநில முதல்வராக சிமன்பாய் பட்டேலும் துணை முதல்வராக கேசுபாய் பட்டேலும் (1990-1994 வரை) இருந்த போது 1993-ம் ஆண்டு அகமதாபாத்தின் எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் ஹரேன் பான்டியா. அதைத் தொடர்ந்து பாஜக வசமே எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதி இருந்து வருகிறது. அவர் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.
பின்னர் 2001-ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் நீக்கப்பட்டு நரேந்திர மோடி பொறுப்பேற்கிறார். அவர் ஹரேன் பான்டியாவின் எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் ஹரேன் பான்டியா அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ராஜ்கோட் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் மோடி. இதனால் ஹரேன் பான்டியாவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.
ஹரேன் பான்டியா கொலை..
இந் நிலையில் 2003-ம் ஆண்டு மார்ச் 26-ந் தேதி தமது காரில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஹரேன் பாண்டியா உடல் கண்டெடுக்கப்படுகிறது. கோத்ரா கலவரத்துக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக நடந்துள்ள கொலை இது என மோடி அரசு அறிவிக்கிறது. ஆனால் பான்டியாவின் தந்தை வித்தல் பான்டியாவோ மோடி அரசு தான் இப்படுகொலைக்கு காரணம் என்று புகார் தெரிவித்தார். பான்டியாவின் மனைவி ஜாக்ருதியும் மோடியை வறுத்தெடுத்த கையோடு நீதிமன்றப் படிக்கட்டுகளிலும் ஏறினார்.
பான்டியா மனைவிக்கு சீட்
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மோடிக்கு எதிரான கேசுபாய் பட்டேல் தமது குஜராத் பரிவர்த்தன் கட்சி சார்பில் பான்டியாவின் மனைவிக்கு சீட் கொடுத்திருக்கிறார். ஹரேன் பான்டியா செல்வாக்கு செலுத்திய அதே எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதியில்தான் ஜாக்ருதி பான்டியா போட்டியிட இருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.