டெல்லியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்! கூடங்குளம் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு!
டெல்லி: இந்தியாவுக்கு வருகை தந்துள்ளர் ரஷிய அதிபர் புடினுக்கு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலை ரஷியாவின் உதவியுடன் அமைக்கப்படுவதால் தொடர்ந்து புதினின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. அவரது பயணம் சில முறை ஒத்தியும் வைக்கப்பட்டு கடைசியாக இன்று இந்தியா வந்தடைந்திருக்கிறார். புதினின் இந்திய பயணத்தின் நோக்கத்தில் முதன்மையாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது போர் விமான விற்பனைதான்!
தற்போதைய பயணத்தின் போது ரஷியாவிடமிருந்து 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான போர் விமானங்கள் மற்றும் விமா என்ஜின்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடும் என்று தெரிகிறது. இதேபோல் ராணுவ தொழில்நுட்ப விவகாரங்களிலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் புதினின் வருகையை கடுமையாக எதிர்த்திருக்கிறது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகைக்கு கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்து கொள்கிறோம். ரஷிய அரசு இந்திய உள் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. மேலும் இந்திய மக்களுக்கு பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவுக்கான ரஷிய தூதர் இந்திய உள்விவகாரங்களில் தலையிட்டு இந்தியாவின் எரிசக்தி கொள்கை, வளர்ச்சி கொள்கை, நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் போராட்டங்கள் குறித்து தேவையில்லாத கருத்துகளை தெரிவித்துள்ளார். பல திறனில்லாத ஒப்பந்தங்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் காலதாமதம் போன்றவற்றால் இந்தியாவுக்கு ரஷியா ஏராளமான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று சாடியுள்ளது.