வீட்டு மாடியில் விளையாடச் சென்ற 7ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி
சென்னை: தாம்பரத்தில் வீட்டு மாடியில் விளையாடச் சென்ற 7ம் வகுப்பு மாணவனின் கை மின்கம்பியில் பட்டதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானான்.
சென்னையை அடுத்த தாம்பரம் லட்சுமிபுரம் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். துபாயில் டிரைவராக உள்ளார். அவரது மனைவி சுலேகா பேகம். அவர்களது மகன் பயாஸ்(12). மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தான். நாகர்கோவிலில் இருந்து தங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை அழைத்துச் செல்ல சுலேகா தனது மகனுடன் நேற்று மாலை தாம்பரம் வந்தார். ஆனால் உறவினர்கள் தாம்பரம் வர நேரமாகும் என்று தெரிந்ததையடுத்து அவர் மகனுடன் முடிச்சூர் சாலையில் கக்கன் தெரு சந்திப்பில் உள்ள குடும்ப நண்பர் ஜெகநாதன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவர் ஜெகநாதன் குடும்பத்தாருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையே பயாஸ் அங்கிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் விளையாடச் சென்றான். மாடிக்கு செல்லும் படிக்கு மேலே உயர் அழுத்த மின்கம்பி செல்வதைக் கவனிக்காமல் பயாஸ் அதில் கையை வைத்துவிட்டான். இதில் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் அவன் உடல் கருகி மின்கம்பியில் பிணமாகத் தொங்கினான். இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்று பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றியமைக்கக் கோரியும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் வீடுகளுக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை உடனே மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தனர்.