அங்கீகார சிக்கலில் பள்ளிகள்: 1 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
சென்னை: அடிப்படை வசதி இல்லாமல் அங்கீகார சிக்கலுக்குள்ளாகி இருக்கும் 1,000 தனியார் பள்ளியைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் மாணவர்கள் நடப்பாண்டு 10, +2ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அரசு அனுமதி அளித்துள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்து பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடம் தொடர்பாக அரசாணை எண் 48-ஐ தமிழக அரசு பிறப்பித்தது. இதன்படி , மாநகராட்சிகளில் பள்ளிகளுக்கு 6 கிரவுண்ட் நிலமும், நகராட்சிகளில் 8 கிரவுண்ட் நிலமும், மாவட்டத் தலைநகரங்களில் 10 கிரவுண்ட் நிலமும், பேரூராட்சிகளில் 1 ஏக்கர் நிலமும், கிராமங்களில் 3 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
போதிய இடவசதி இல்லாமல் உள்ள பள்ளிகளுக்கு குறைந்தபட்ச இட நிபந்தனையைப் பூர்த்தி செய்ய கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து போதுமான இடவசதி இல்லாத சுமார் 1,000 பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகளின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 143 பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் அரசின் நிபந்தனயை நிறைவேற்றவில்லை. இதனால் இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது கேள்விக்குறியானது.
1 லட்சம் பேருக்கு அனுமதி
இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனுப்பியிருக்கும் கடிதத்தில், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள் இடவசதி தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், தங்களது பள்ளிகளுக்கு அருகில் காலியிடம் இல்லை என்றும், மாநகராட்சிகள், நகராட்சிகளில் இடத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பதிலளித்திருந்தன. பல பள்ளிகள் மற்றொரு இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளன. போதிய இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அரசு கொள்கை அளவிலான முடிவு எடுக்க வேண்டியுள்ளது.எனவே, இந்த தனியார் பள்ளிகளில் 10,12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1 லட்சம் மாணார்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னையில் 173 பள்ளிகள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 380 பள்ளிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 173 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
மார்ச் முதல் கட்டாய கல்வி உரிமை சட்டம்
வரும் மார்ச் மாதம் முதல் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் இருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், அதன் பிறகு நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
அரசாணையை ரத்து செய்க
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் சங்கப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் கூறுகையில், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக அரசாணைக்கு முன்பிருந்த பழைய பள்ளிகளுக்கு குறைந்தபட்ச நிலத்தை வலியுறுத்தக் கூடாது. புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே இதை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால், குறைந்தபட்ச நில அளவைக் குறைக்க வேண்டும். தனியார் பள்ளிகளைப் போல் பல அரசுப் பள்ளிகளிலும் குறைந்தபட்ச நிலம் இல்லை. அந்தப் பள்ளிகளுக்கும் இதை அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.