இலங்கையருக்கு இரட்டைக் குடியுரிமை.. கோத்தபாய நேரில் விசாரணை நடத்துகிறார்!
கொழும்பு: வெளிநாடுகளில் வாழும் இலங்கை நாட்டவருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான குழு விசாரிக்கும். இதற்கு முன்னர் இலங்கையில் இத்தகைய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது இல்லை.
1980களில் இலங்கையிலிருந்து ஈழத் தமிழர்களும் கணிசமான சிங்களரும் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். பின்னர் அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாகினர். தற்போது போர் முடிவுற்ற நிலையில் இலங்கைக்கு திரும்பி இரட்டை குடியுரிமை கோருவோருக்கும் புலிகளுக்குமான தொடர்பு பற்றி விசாரிக்கவே கோத்தபாய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வெளியுறவு செயலர் கருணதிலக அமுனுகம, பொது நிர்வாக செயலர் அபயகோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்போர் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், ஐந்து ஆண்டுகாலம் இலங்கையில் நிரந்தரமாக தங்க முதலில் அனுமதிக்கப்படும். பின் அவரின் செயல்பாடுகளைப் பொறுத்து இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.
இதற்கான கட்டணமாக ரூ2 லட்சத்தை இரு தவணைகளில் கட்ட வேண்டும். 1987-ம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 4 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக பரிசீலனையில் இருக்கிறது.,