திமுக மீது கடுப்பில் காஞ்சி மட விசுவாசிகள்
காஞ்சிபுரம்: திமுக சங்கர மடம் இல்லை என திமுக நிர்வாகிகள் திரும்பத் திரும்ப கூறி வருவதற்கு காஞ்சி சங்கரமட விசுவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் தம்பி மு.க.ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன் என்று ஒரு விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார். இதற்கு கருணாநிதியின் மூத்த மகனும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று கூறியுள்ளார்.
காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தரான வளசை ஜெயராமன் என்பவர், "சங்கர மடம் என்பது பாரம்பரியம் மிக்கது. காஞ்சி மகா பெரியவர் சந்திசேகரர், ஹொய்சால வம்சத்தைச் சேர்ந்த கன்னடப் பிராமணர், ஜெயேந்திரர், திருவாரூரைச் சேர்ந்த தமிழர், பாலப் பெரியவரான விஜயேந்திரர், தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர். மூவருக்குமே ஒருவருக்கு ஒருவர் எந்த உறவும் கிடையாது."
"சங்கர மடத்தில் பட்டத்துக்கு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மடங்களிலும் இருந்து சதஸ் நடத்தி, அதில் முதல் மாணவராகத் தேறியவர் தான் ஜெயேந்திர். அதற்கு பிறகுதான் அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது. இந்த நிலையில் திமுகவைப் போல கோட்டா சிஸ்டத்தில் எல்லாம் பதவி வழங்கும் வழக்கம் சங்கர மடத்திலும், வேறு எந்த மடத்திலுமே கிடையாது.
தேவையில்லாமல் திமுக குடும்பத் தகராறில் சங்கர மடத்தை இழுப்பது தவறு. இதற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்றார்.
திமுகவிற்கு எதிராக காஞ்சி மட பக்தர்கள் அல்லது அவர்களது ஆதரவு அமைப்பு சார்பில் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.