கர்நாடகா அரசு கவிழும் அபாயம்: 25 எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை ராஜினாமா?
கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா, பாஜகவிலிருந்து விலகி கர்நாடகா ஜனதா கட்சியைத் தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் தொடக்க விழாவில் 7 அமைச்சர்களும் 14 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். ஆனால் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து எதியூரப்பா அவ்வப்போது பாஜக அரசுக்கு கெடு விதிப்பதும் பின்னர் அவராகவே கெடுவை தளர்த்திக் கொள்வதுமாக வேடிக்கையான போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் எதியூரப்பா, தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை உடனே ராஜினாமா செய்ய உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எதியூரப்பாவின் கட்டளையை ஏற்று நாளை 25 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளனர். இவர்களில் 5 அமைச்சர்களும் அடங்குவர் எனத் தெரிகிறது. பொதுப்பணித் துறை அமைச்சர் சி.எம்.உதாசி, மின் துறை அமைச்சர் ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட அமைச்சர்களும், நேரு ஹோலேக்கர், பி.பி.ஹரீஷ், சுரேஷ் கவுடா பாட்டீல், ஜே.சிவண்ணா, பசவராஜ்பாட்டீல், சந்திரண்ணா, சுரேஷ், சிக்கண்ணா கவுடா, ஸ்ரீசைலப்பா உள்ளிட்ட எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகரிடம் வழங்காமல் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜிடம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
இந்த ராஜினாமா கடிதங்களை ஆளுநர் ஏற்றால் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்து நெருக்கடியை சந்திக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் பிப்ரவரி 8-ந் தேதி ஜெகதீஷ் ஷெட்டர் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.