கால்பந்து போட்டி வன்முறை வழக்கில் 21 பேருக்கு தூக்கு! தீர்ப்பை எதிர்த்த போராட்டத்தில் 30 பேர் பலி!!
கெய்ரோ: எகிப்தில் கால்பந்து போட்டி மோதல் வழக்கில் 21 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 30 பேர் வரை பலியாகி உள்ளனர்.
எகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது இரு அணி ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 74 பேர் பலியாகி இருந்தனர். இது தொடர்பான வழக்கில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் 21 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போர்ட் சேட் நகரில் வன்முறை வெடித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோரின் உறவினர்கள் அந்நகர சிறை முன்பாக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாருடன் மோதல் வெடித்தது.
இம்மோதலில் இதுவரை சுமார் 30 பேர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.












Click it and Unblock the Notifications