டெல்லி பலாத்கார வழக்கில் கைதான ஒருவன் மைனர் - சிறார் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி: நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் சிக்கி கைதான 6 பேரில் ஒருவன் மைனர் என்று சிறார் சீர்திருத்த வாரியம் அதாவது சிறுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிறுவன் என்று அறிவிக்கப்பட்டுள்ள இவன்தான் அந்த பிசியோதெரப்பி மாணவியை 2 முறை பலாத்காரம் செய்தும், இரும்புக் கம்பியால் வயிற்றில் பலமாக தாக்கி அந்த மாணவியின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 16ம் தேதி தெற்கு டெல்லியில் இரவில் பஸ்சில் தனது நண்பருடன் பயணித்த அந்த 24 வயது மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பஸ்சில் வைத்து நையப்புடைத்தது. பின்னர் அவரை கொடூரமாக ஆறு பேரும் பலாத்காரம் செய்தனர்.
சிறுவன் செய்த அடாத செயல்
ஆறு பேரில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டவன் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சிறுவன்தான் மிக மோசமான முறையில் நடந்து கொண்டான்.
மயக்க நிலையிலும் பலாத்காரம்.. இரும்புக் கம்பியால் தாக்கு
அந்த மாணவி மயக்க நிலைக்குப் போன பின்னரும் கூட அந்த சிறுவன் கொடூரமாக பலாத்காரம் செய்தான். மேலும் இரும்புக் கம்பியாலும் வயிற்றில் பலமாக தாக்கினான்.
உயிரிழப்புக்கும் இவனே முக்கியக் காரணம்
மாணவியின் உயிர் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் பறி போக இந்த மைனர் பையனின் செயலே காரணம் என்பது காவல்துறையினரின் கருத்தாகும்.
மைனர் என சிறார் நீதிமன்றம் அறிவிப்பு
இந்த நிலையில் இவன் மைனர் என்பதால், மற்ற ஐவரோடும் சேர்த்து இவனை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று சிறார் சீர்திருத்த வாரியம் அதாவது சிறுவர் நீதிமன்றம் அறிவித்து விட்டது. இதனால் இந்த குற்றவாளிக்கு பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்பே இல்லை. அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே கிடைக்கும்.
பள்ளிச் சான்றிதழ் அடிப்படையில்
அந்த சிறுவனின் பள்ளிச் சான்றிதழ் மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இவன் மைனர் என்று இன்று மாஜி்ஸ்திரேட் அறிவித்தார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
மிகப் பெரிய அளவில் பரபரப்பையும், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளையும் பரப்பிய இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மைனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.