பிரதமர் வேட்பாளரை அறிவித்தால் பாஜக கூட்டணி உடையும்: பிரவீன் தொகாடியா
போபால்: லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று பாஜக அறிவித்துவிட்டால் அக்கட்சி தலைமையிலான கூட்டணி உடைந்தே போய்விடும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவித்தால் அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல.. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சிதறுண்டும் போகும்.
இதனால் பாஜக வெற்றி பெற்ற பிறகு ஜனநாயக முறைப்படி அதன் எம்.பிக்கள்தான் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விஸ்வ ஹிந்து பரிஷத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் எந்த ஒரு தனிநபரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்துத்துவா சக்திகள் வலுப்பட வேண்டும் என்றார் அவர்.
குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை மனதில் வைத்துதான் தொகாடியா இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. குஜராத் மாநிலத்தில் மோடிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி பாஜகவைவிட்டே வெளியேறி தனிக் கட்சி தொடங்கிய கேசுபாய் பட்டேலை பகிரங்கமாக ஆதரித்தும் மோடியை விமர்சித்தும் கருத்துகளைத் தெரிவித்திருந்தவர் தொகாடியா என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.