மோடி 100% மதசார்பற்றவர்; பிரதமர் பதவிக்கு போட்டியிட தகுதியானவர்: ராம் ஜெத்மலானி
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் பதவி வேட்பாளராக நூறு சதவிகிதம் தகுதியானவராக இருப்பார் என்று ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
பிரபல மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா பாஜக எம்.பியுமான ராம்ஜெத்மலானி, இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
பாஜகவில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மூத்த தலைவர்கள் இருக்கையில், யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என்ற பிரச்சனை பாஜகவில் இருந்து வருகிறது. அக்கட்சியில் உள்ள மிகச்சிறந் தலைவராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம். அந்த தகுதி நூறு சதவிகிதம் நரேந்திர மோடிக்கு உண்டு.
2014ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதை விட இப்போதே அறிவித்து விடலாம். அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை தேர்வு செய்வது கடினம்.
மோடியின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நிர்வாகத் திறமையை வைத்தே அவரை நான் பரிந்துரைக்கிறேன். மோடி சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்து 2002ம் ஆண்டிலிருந்தே இருக்கிறது. அந்த பிம்பத்தை அவர் உடைத்துவிட்டார். அவர் 100 சதவீதம் மதசார்பற்றவர்.
அதே சமயம் மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் சரத்யாதவ் ஆகியோர் மிரட்டல் விடுத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அவர்களும் மோடியை உணர்ந்து கொள்வார்கள் என்றார்.
பிரதமர் வேட்பாளராக நிற்க விரும்புபவர்கள் தங்களின் தகுதி குறித்து ஆராய வேண்டும். பழைய தவறுகள் அனைத்தும் மறக்க, மன்னிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருப்பவர்கள் யாரோ அவரே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். அந்த வகையில் நரேந்திர மோடியையே நான் பரிந்துரைக்கிறேன்
மோடி பிரதமர் வேட்பாளராவதற்கு பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா ஆதரவளித்துள்ளார். அதேபோல அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் ஏனெனில் பாஜகவில் உள்ள மிகச்சிறப்பான மனிதர் மோடி என்று ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.